திங்கட்கிழமை முதல் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வின்போது பொதுமக்களினால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளைமறுதினம் மே 11ஆம் திகதி முதல் நாட்டின் பொருளாதாரத்தினையும் மக்களின் வாழ்வாதரத்தினையும் மேம்படுத்தும் நோக்குடன் ஊரடங்குசட்டம் உள்ளிட்ட பலகட்டுப்பாடுகளில்  தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஆயினும் நாட்டில் கோரோனா பரம்பல் அபாயம் நீங்கிவிடவில்லை என்பதனை பொதுமக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். எனவே மக்களை மிகவும் விழிப்புடனும் அவதானத்துடனும் பின்வரும் நடைமுறைகளினை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  • வேலைக்கு செல்வோர், அத்தியாவசிய விடயங்கள் மற்றும்    அத்தியாவசிய பொருள்களினை கொள்வனவு செய்ய வெளியே செல்வோர் தவிர்ந்த ஏனையவர்கள்  வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
  • அத்தியாவசிய தேவைகளிற்கு வெளியே செல்பவர்கள்  தாம் செய்ய வேண்டிய வேலைகளுக்காக அடிக்கடி வெளியே செல்லாது ஒரே தடவையில்  பல கருமங்களினை நிறைவேற்றிக் கொள்ள கூடியவகையில் திட்டமிட்டு செயற்படவும்.
  • வெளியே செல்பவர்கள் அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் பொதுப்போக்குவரத்தின் போதும்  இரண்டு பேருக்கு இடையில் ஆகக் குறைந்தது 1 மீற்றர்  தூர இடைவெளியில் பேணவும்.
  • வெளியில் செல்லும்போது  இயன்றளவு பிரத்தியேக போக்குவரத்து முறைகளினை பாவிக்கவும்.( உதாரணமாக நடந்து செல்லல், துவிச்சக்கர வண்டியில்  செல்லல்).
  • அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள்   என்பவற்றிற்கு உள்ளே நுழையும் முன்னர் கைகளினை சவர்க்காரமிட்டு முறைப்படி கழுவிக் கொள்ளவும்.
  • வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்பும் கைகளினை சவர்க்காரமிட்டு முறைப்படி கழுவிக்கொள்ளவும்.
  • காய்ச்சல், இருமல், தொண்டைநோய் போன்ற அறிகுறிகள் உடையவர்கள்  பொது இடங்களிற்கு செல்வதனை தவிர்த்தல் வேண்டும்.
  • ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொது நிகழ்வுகள் வைபவங்கள்,  கூட்டங்கள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் போன்றவற்றிற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதனை மனதில் கொள்ளவும்.
  • இயன்றளவு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளினையே உண்பதனை பழக்கப்படுத்திக் கொள்வதுடன் உணவகங்களில் இருந்து உணவினை பெறவேண்டி இருப்பின்  உணவினை எடுத்துச் சென்று உள்கொள்ளவும்.
  • மேலும் உணவகங்களில் ஒன்றுகூடி உணவு அருந்துவதை தவிர்த்துக் கொள்ளவும்.
  • உங்கள் பிரதேசத்திற்கு யாரவது புதியவர்கள்  வருகை தந்திருந்தால் உங்களது பகுதி சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுசுகாதார பரிசோதகர் அல்லது கிராம சேவையாளருக்கு அறியத்தரவும்.

அவர்களை தொடர்புகொள்வதில்  சிரமம் இருப்பின் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் அவசரஅழைப்பெண் 021-222-6666 இற்கு தகவல் வழங்கவும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.