பொதுத் தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனுதாக்கல்

பொதுத் தேர்தல் வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் பட்டாலி சம்பிக்க ரணவக்க ஆகியோரே இவ்வாறு அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

மார்ச் 02 இல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 இல் தேர்தல் நடத்த திகதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மார்ச் 21 இல் வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டது.

ஆயினும் தற்போது ஜூன் 20 இல் தேர்தல் நடத்தப்படுமென வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி ஏற்கனவே 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முதலில் ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகனான, சட்டத்தரணி சரித குணரத்ன மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அது தவிர, ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், ரீ.எம். பிரேமவர்தன, பேரசிரியர் அன்டன் மீமண, ஏ.எம். ஜிப்ரி, எஸ். சிவகுருநாதன், மஹிந்த ஹத்தக்க, எச்.டி.எஸ்.எப்.டி. ஹேரத், எம்.எஸ். ஜயகொடி ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 03 மாதத்தினுள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதனைவிடுத்து ஜூன் 20 இல் தேர்தல் நடத்துவது சட்டவிரேதமானதெனவும் மனுக்களில்  குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் உயர் நீதிமன்ற நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் நிலையில் இந்த மனுக்கள் அன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.