கைவிடப்பட்ட தோட்ட விடுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்த இருவர் டயகம பொலிஸாரால் கைது!

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம கிழக்கு தோட்டத்தில் கைவிடப்பட்ட தோட்ட விடுதியொன்றில் மிகவும் ரகசியமான முறையில் பாரிய அளவில் கள்ளச்சாராயம் ( கசிப்பு ) காய்ச்சி வந்த இருவரை டயகம பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டயகம பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலினையடுத்து பொலிஸார் நேற்று இரவு 10 மணியளவில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.அதன்போது கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 7680 மில்லிலீற்றர் கள்ளச்சாராயம் ( கசிப்பு ) 180000 மில்லிலீற்றர் கோடா மற்றும் கசிப்பு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பீப்பா,எரிவாயு சிலிண்டர் , எரிவாயு அடுப்பு , முட்டிகள்,யூரியா உரம்  உட்பட பல பொருட்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் உபகரணங்கள் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சுஜீவ குணத்திலன தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் டயகம கிழக்கு தோட்ட குமாஸ்தாவாக இருப்பதாகவும் இவர் மிகவும் இரகசியமான முறையில் கள்ளச்சாராய உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளதாகவும் ஒருபோத்தல் கள்ளச்சாராயம் 2000 ரூபாவுக்கு விற்பனைச்செய்யப்படுவதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த கள்ளச்சாராய உற்பத்திக்கு யூரியா உரம் போன்ற நச்சப்பதார்த்தங்கள் பயன்படுத்துவதால் இதனை குடிப்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.