தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு யாழ். மக்களுக்கு அறிவுறுத்தல்

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நல்லிணக்க மையம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த சில வாரங்களாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது மக்கள் பட்ட இன்னல்களை நாமறிவோம்.

இலங்கையில் மட்டுமல்ல முழு உலக நாடுகளிலும் இந்த ஊரடங்கு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த நிலைமையிலிருந்து விடுபட்டு மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில்தான் ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவதென முடிவெடுத்துள்ளோம்.

எனினும் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தினாலும் பொதுமக்கள் கூட்டமாக வீதியில் இறங்குவதை நாங்கள் விரும்பவில்லை. தேவையானவர்கள் மட்டும் வீதிக்கு வாருங்கள். தேவையில்லாது வீதிகளில் பயணிக்காது தனித்திருத்தல் உங்களுக்கும் நல்லது உங்களுடைய சமூகத்திற்கும் நல்லது.

எனவே மக்கள் இதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிருங்கள்” எனவும் இராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.