விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை சுமந்திரன் நிறுத்த வேண்டும்: சம்பந்தனுக்கு சார்ள்ஸ் கடிதம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர், அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று (திங்கட்கிழமை) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்த கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழரின் இன விடுதலைக்காக அதியுட்ச தியாகங்களை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.

இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பல தடவை என்னால் சுட்டிக்காட்டப்பட்டதை தாங்கள் அறிவீர்கள். இந்த விடயம் தொடர்பாக இனிமேல் கதைக்க வேண்டாம் என்றும் என்னால் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் 08.05.2020 அன்று ஒரு சிங்கள ஊடகத்திற்கு இதே போன்று கருத்து கூறியிருக்கின்றார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பினும் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற காரணத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர்.

நானும் அவருடைய கருத்தை எதிர்க்கின்றேன். சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும்.

அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பதவி அவரிடத்திலிருந்து வேறு நபருக்கு வழங்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தினை கூட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.