ரட்ண ஜீவன் ஹுலிடம் 500 மில்லியன் நட்டஈடு கோருகின்றார் அங்கஜன் இராமநாதன்…

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணத்தில் தலையிட்டு தனது ஆதரவாளர்களுக்கு வழங்கினார் என உண்மைக்குப் புறம்பான, அடிப்படை ஆதாரங்களற்ற தகவலைத் ஊடகங்களுக்கு தெரிவித்து தனது நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி தனது சட்டத்தரணியூடாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இத்தேர்த்தல் காலத்தில் திட்டமிட்ட விசமப் பிரச்சாரமாக தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன உறுப்பினர் ஒருவர் செயற்பட்டமை திட்டமிட்டே நடந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்களைச் வலிந்து சந்தித்த பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்,

பேரிடர் முகாமைத்துவ நிலையத்தால் வழங்கப்பட்ட நிவாரணத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலர், அங்கஜன் இராமநாதனிடம் கொடுத்தார், என அரசியல்வாதிகளும், வேட்பாளர்களும் தேர்தல் விதிகளை மீறி தமது அரசியல் நோக்கத்துக்காகச் செயற்படுகிறார் எனவும் தெரிவித்திருந்தார்.

பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட பொருட்கள் எவற்றையும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடமிருந்து அங்கஜன் இராமநாதன் பெறவில்லை. இதை மறுதினமே யாழ்ப்பாண மாவட்ட செயலாளரே மறுத்திருந்தார். இந்த அப்பட்டமான பொய்யால் தேர்தல் நெருங்கும் இக் காலகட்டத்தில் மக்கள் மத்தியில் நின்று பணியாற்றும் அவருடைய நற்பெயருக்கு வேணுமென்றே களங்கம் ஏற்படுத்தபட்டுள்ளது.

இரண்டு கிழமைகளுக்குள் பதிலளிக்காவிடில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.