ஆயுதப்பரோட்டத்தை மறுப்பவன் ஈழத்தமிழன் என சொல்ல அருகதையற்றவன்: சுமந்திரனுக்கு சிவமோகன் சாட்டையடி

வவுனியாநிருபர்
ஆயுதப்போரட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம். அதனை மறுப்பவன் ஈழத்தமிழன் என்று சொல்வதற்கு அருகதையற்றவன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் கருத்துக்கு முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் பதிலடி கொடுத்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அகிம்சை அடக்கம் செய்யப்பட்ட நாட்டில் யுத்தம் பலாத்காரமாக திணிக்கப்பட்டது. எனவே ஈழவிடுதலை போராட்டத்தையும் தேசிய தலைவரது அரசியல், ஆயுத போராட்டத்தையும் எவராலும் மறுக்க முடியாது. மறுப்பவர் ஈழதமிழன் என்று சொல்வதற்கு அருகதையற்றவர். சுமந்திரனது கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகவே இருந்துவிட்டு போகட்டும். அப்பிடி ஒரு வசனம் தனிப்பட்ட கருத்தாக கூட சுமந்திரனின் வாயில் இருந்து வந்திருக்க கூடாது.

முள்ளிவாய்காலில் அடைந்த வேதனையை அனுபவிக்கும் வாரமிது.  வன்னி மண்ணிலே வானிலே குண்டுவீச பங்கறில் ஒரு நாள் கூட படுத்திருக்காதவர்களிற்கு விமர்சனம் செய்ய எந்த அருகதையும் இல்லை. குண்டுவீச்சிலே கால்கள் சிதைந்து மயக்கத்திலே இருந்த ஒருவர் முழித்தெழுந்து, எங்கே என் கால்கள் என்றுகேட்ட வேதனையும், அதனை அகற்றிய வைத்தியர்கள் அடைந்த வேதனைகளும் இவர்களிற்கு புரியாது.

கூட்டமைப்பு தனி நபர்களின் சொத்து அல்ல. தேசிய தலைவரால் வடிவமைக்கப்பட்டது. அதனை பாதுகாத்து ஒற்றுமையுடன் முன் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. எங்களுடன் கலந்தாலோசிக்காமல் இப்படியான கருத்துக்களை கூறவேண்டாம் என அவரிடம் நாங்கள் வினயமாக கேட்டுகோள்கிறோம்.

ஒரு கட்சியின் ஊடக அறிவிப்பாளர் ஒருவர் தனது தனிப்பட்ட கருத்தை சொல்லும் போது அது அவரது கட்சிக்கும் பாதிப்பு செலுத்தும். எனவே ஒரு கருத்தை சொல்லிவிட்டு தனிப்பட்ட கருத்து என்று சொல்வது அழகாக இருக்காது. அந்த தவறை அவர் விட்டிருக்க கூடாது. ஆயுதப்போராட்டம் கையில் எடுக்கப்படவில்லையாக இருந்தால் ஒட்டுமொத்த தமிழர்களும் அடையாளமே இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள். ஆயுதப்போரட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு எதிராக பலரும் கட்சிக்கு முறைப்பாடு செய்துள்ளனர். முன்னரும் பாராளுமன்ற குழுக் கூட்டங்களில் நாம் அவரிடம் இவ்வாறு பேச வேண்டாம் என சொல்லியிருக்கின்றோம். எனவே கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும்.

அத்துடன்,  ஊடகபேச்சாளர் என்ற விடயம் கட்சியால் தீர்மானிக்கபட வேண்டியது. அந்த சரத்துக்களை சரியாக அவர்கள் பின்பற்றவில்லை என்று உறுதி செய்யப்பட்டால், கட்சி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.