இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை – மழையுடனான வானிலை அதிகரிக்கும்

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.