மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதி, பெரிய கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தீபம் ஊடக நிறுவனத்தில் பணியாற்றிவரும் திருகோணமலை காபர் வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும் ஈ.மிதுன்சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த, ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இருந்து கல்முனைக்கு உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர்.

இதன்போது, சம்பவ தினமான பகல் 2 மணியளவில் பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலையத்துக்கு அருகில் மோட்டர் சைக்கிள்களை வீதி ஓரத்தில் நிறுத்தியபோது பின்னால் வந்த உழவு இயந்திரம் மோட்டர் சைக்கிளில் மோதியது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.