தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனுக்களை விசாரிக்க ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்

நாடாளுமன்ற தேர்தல் வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்பமை உரிமை மனுக்களை ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் உயர்நீதிமன்றினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிபதிகள் குழுவில் புவனெக அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த அடிப்படை உரிமை மனுக்கள் இந்த மாதம் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் 02 இல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 இல் தேர்தல் நடத்த திகதி நிர்ணயிக்கப்பட்டது. எனினும் கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மார்ச் 21 இல் வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஜூன் 20 இல் தேர்தல் நடத்தப்படுமென வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 10இற்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முதலில் ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகனான, சட்டத்தரணி சரித குணரத்ன மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அது தவிர ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், ரீ.எம். பிரேமவர்தன, பேரசிரியர் அன்டன் மீமண, ஏ.எம். ஜிப்ரிஇ எஸ். சிவகுருநாதன், மஹிந்த ஹத்தக்க, எச்.டி.எஸ்.எப்.டி. ஹேரத், எம்.எஸ். ஜயகொடி ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் பட்டாலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அடிப்படை உரிமைகள் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமையை ரத்து செய்ய கோரி ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் பொது செயலாளர் ஆரியவங்ச திஸாநாயக்க இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 03 மாதத்தினுள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதனைவிடுத்து ஜூன் 20 இல் தேர்தல் நடத்துவது சட்டவிரேதமானதென குறித்த மனுக்களில்  தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.