யாழில் அதிகாலையில் இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு! 22 வயது இளைஞன் படுகாயம்

யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

“மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார்.

அவரது கையில் கல்லடிப்பட்டு படுகாயமடைந்துள்ளார். அதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்தவேளை, குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இராணுவத்தினர் மறித்தனர். எனினும் அதனை மீறி சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.” என ஆரம்ப விசாரணைகளில் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதன் போது சூட்டுக்கு இலக்காகிய இளைஞன் வீட்டுக்குச் சென்று அவசர உதவி அம்பியூலன்ஸ் சேவையில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.

குருதிப் போக்கு உள்ளபோதும் இளைஞன் பாதுகாப்பாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.