கொவிட் -19 நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் தூதுவர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரவேற்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரேசில் மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர்களும் இந்திய குடியரசின் உயர் ஸ்தானிகரும் நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

வீடியோ கலந்துரையாடல் தொழிநுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த நற்சான்றுப் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.

இணைய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வாறானதொரு சிறப்பான நிகழ்வு இலங்கையில் இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் உருவாகியுள்ள பிரச்சினைகள் முடியும் வரை நற்சான்றுப் பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வை பிற்படுத்தாது ஏற்கனவே திட்டமிட்டவாறு நடத்துமாறு ஜனாதிபதியினால் பணிப்புரை வழங்கப்பட்டிருந்தது.

இது தற்போது உருவாகியுள்ள உலகளாவிய நோய்த்தொற்று நிலைமைக்கு மத்தியில் இலங்கை கைக்கொண்டுள்ள ஒரு புத்தாக்க முறைமையாகும். இதன் பெறுபேறாக வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் அதேநேரம் சமூக, பொருளாதார ரீதியாகவும் தற்போது இராஜதந்திர ரீதியாகவும் முன்னோக்கிச் செல்வதில் இலங்கை வெற்றியடைந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற நிகழ்வில் தூதுவர்கள் ஒளிப்படக் கருவியின் முன்னால் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்ததை தொடர்ந்து ஜனாதிபதியினால் தூதுவர்கள் வரவேற்கப்பட்டனர்.

நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த தூதுவர்கள் வருமாறு

1. திரு. சேர்ஜியோ லியிஸ் கனேஷ் – இலங்கைக்கான பிரேசில் நாட்டின் தூதுவர்(Mr. Sergio Luiz Canaes – Ambassador- designate of the Federative Republic of Brazil based in Colombo)
2. திரு. ஹாஷிம் அஷ்ஜாசாதேஹ் – இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் (Mr. Hashem Ashjazadeh Ambassador- designate of the Islamic Republic of Iran based in Colombo)
3. திரு. கோபால் பாக்லே – இலங்கைக்கான இந்திய குடியரசின் உயர் ஸ்தானிகர்(Mr. Gopal Baglay High Commissioner- designate of the Republic of India based in Colombo)

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆர்யசிங்க மற்றும் சர்வதேச உறவுகளுக்கான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.