முள்ளிவாய்க்கால் துக்கநாளில் ஒருநேரம் கஞ்சியை அருந்தி உணவற்று தவித்த எம் உறவுகளை நினைவு கூருவோம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 

மே 18ம் திகதி தங்கள் வீடுகளில் மாலை 06.00 மணி தொடக்கம் 07.00 மணி வரையான கால இடைவெளியில் சுடரேற்றி அஞ்சலிக்குமாறும், எமது உறவுகள் போர் அவலங்களுக்கு மத்தியிலே உணவுக்கு வழியின்றி வெறும் கஞ்சியை மட்டும் அருந்தி உயிர்காத்த அந்தக் கொடுமையை நினைவு கூறும் முகமாக 18ம் திகதி ஒரு நேரம் கஞ்சியை அருந்துமாறும், இதேவேளை அன்றைய தினம் இரவு 08.00 மணிக்கு எல்லா ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களிலும் ஒரு நிமிடம் அல்லது இரு நிமிட நேர மணி ஒலியை எழுப்பி அஞ்சலிக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் இவ்வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் தினம் மே 18ல் நாங்கள் வழமையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆலயங்களில் பிரார்த்தனை, பூசை அதன் பின்னர் அன்னதானம் போன்ற நிகழ்வுகளுடன் இந்தத் தினத்தை அனுஸ்டித்து வருகின்றோம். இம்முறை கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார நடைமுறைகளைப் பேண வேண்டியுள்ளது. எனவே நாமெல்லாம் ஓரிடத்தில் கூடி இந்த அஞ்சலி நிகழ்வினைச் செய்ய முடியாத நிலையிலுள்ளோம்.

இந்நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் மாலை 06.00 மணி தொடக்கம் 07.00 மணி வரையான கால இடைவெளியில் சுடரேற்றி அஞ்சலிக்குமாறும், முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் போர் அவலங்களுக்கு மத்தியிலே உணவுக்கு வழியின்றி வெறும் கஞ்சியை மட்டும் அருந்தி உயிர்காத்த அந்தக் கொடுமையை நினைவு கூறும் முகமாக 18ம் திகதி திங்கட்கிழமை ஏதாவது ஒரு நேர உணவாக அல்லது ஏனைய உணவுப் பண்டங்களில் கஞ்சியையும் அருந்தி இந்த வரலாற்று நிகழ்வை பெரியோர்கள் நாம் கடைப்பிடிப்பதோடு, சிறார்களுக்கும் இந்த உணர்வை ஊட்டும் வகையில் ஒரு துக்க நாளாகவும், பிரார்த்தனை நாளாகவும் இத்தினத்தைக் கடைப்பிடிப்போம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அன்பர்கள் உங்கள் உங்கள் பிரதேசங்களில் இவ்விடயம் தற்போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து நiபெறுவதற்கு ஊக்கமளிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். இதேவேளை அன்றைய தினம் இரவு 08.00 மணிக்கு உங்கள் உங்கள் பகுதியில் உள்ள எல்லா ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களிலும் ஒரு நிமிட அல்லது இரு நிமிட நேர மணி ஒலியை எழுப்பி அஞ்சலிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். இதனை வடக்கு கிழக்கிலுள்ள எல்லாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிருவாகத்தினரும், கருதிற்கு கொண்டு வடக்கு கிழக்கு எங்கனும் இவ்விடயம் நடந்தேற உணர்வோடு சேர்ந்த உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.