வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பிராந்திய அந்தமான் கடற்பரப்பில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழை மேலும் தீவிரமடையும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியிலும், அந்தமான் கடற்பிராந்தியத்தில் தென் பகுதியில் இணைந்துள்ள கடற்பிரதேசத்தில் உருவாகியிருக்கும் தாழமுக்க பிரதேசம் தொடர்நிலைக் கொண்டுள்ளது.

இது மேலும் தீவிரமடைந்து வடமேற்கு திரையினுடாக நகர்ந்துக் கொண்டிருப்பதாக இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தாழமுக்க பிரதேசத்தின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் குறிப்பாக தென் மேற்கு பிராந்தியத்தில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழையுடனான காலநிலை அதிகரித்து காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கு அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் எதிர்வுக் கூறியுள்ளது.

அத்தோடு, நாட்டுக்கு மேலாக மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும் மத்திய, சப்பிரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று அடிக்கடி அதிகரித்து வீசும் என்பதால், மீனவர்களும் கடற்சார் ஊழியர்களும் ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்வதுடன், வளிமண்டலதிணைகளத்தின் எச்சரிக்கைகமைய செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.