ஈழம் என்பது இலங்கையின் பூர்வீகப் பெயர்தான்- ஜனகன் சுட்டிக்காட்டு

இலங்கையை ‘ஈழம்’ என்று 1976ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிடவில்லை எனவும் இற்றைக்கு 2000 ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வருகிறது என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.

இதற்கான பல வரலாற்று ஆதாரங்கள் மற்றும் இலக்கியக் குறிப்புகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ஈழம்’ என்பது இலங்கையின் பூர்வீகப் பெயரல்ல என்று, இங்கிலாந்துக்கான இலங்கைத் தூதுவர் வௌியிட்டுள்ள கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் இனங்களிடையே ஒரு சுமூகமான உறவை ஏற்படுத்தும் வகையில் செயற்படவில்லை என்பது அண்மைக்கால பல செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதன் தொடர்ச்சியாக மே 15 ஆம் திகதி, இலண்டனிலுள்ள The Guardian சஞ்சிகையில் வந்துள்ள Travel Quiz பகுதியில் அமைத்திருந்த இரண்டாவது கேள்வி ‘ஈழம் என்ற பூர்வீகப் பெயர்கொண்ட, பிரபலமான சுற்றுலாத் தீவு எது?’ (Eelam is an indigenous name for which popular holiday Island?) என்பதாகும்.

இந்த கேள்வியில் மேலதிக விளக்கமாக இந்தத் தீவில் இடம்பெற்ற அண்மைக்கால இராணுவ கிளர்ச்சியானது LTTE எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனைப் பார்த்த இலங்கை அரசாங்கம் உடனடியாக அதற்குக் கண்டனம் தெரிவித்தும், அந்தக் கேள்வியை நீக்கவேண்டும் எனவும் மேற்படி சஞ்சிகைக்குக் கடிதம் மூலம் அறிவித்ததைத் தொடர்ந்து அந்தக் கேள்வியை நீக்கியுள்ளார்கள்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ‘தமிழ் ஈழம்’ என்பதற்காகப் போராடினார்களே தவிர, மொத்த ஈழமும் வேண்டும் என்று போராட ஆரம்பிக்கவில்லை என்பதை அரசாங்கம் மறந்துவிட்டதா அல்லது மறைக்கின்றதா?

இலங்கையை ஈழம் என்று 1976ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிடவில்லை, இற்றைக்கு 2000 ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பல வரலாற்று ஆதாரங்கள் மற்றும் இலக்கியக் குறிப்புகள் உள்ளன.

முக்கியமாக தமிழ் இலக்கிய நூலில் ஒன்றான பட்டினப்பாலையில் ‘ஈழ உணவு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பல நூறு கல்வெட்டுகளில் இந்த ‘ஈழம்’ என்ற சொல் இருப்பதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

கி.மு 11இல் இருந்து இலங்கையில் உள்ள பல்வேறு கல்வெட்டுகளில் இந்தப் பெயரைப் பார்க்க முடியும். உதாரணமாக அநுராதபுர மாவட்டத்தில் உள்ள அபயகிரி விகாரைக்கு அருகில் உள்ள கல்வெட்டில் ‘ஈழம்’ என்ற பெயர் கி.மு 2 நூற்றாண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ‘இரத்தின புரம்’ என்ற பெயரும் ‘தாப்பிரபரணி’ என்ற பெயர்களும் இருந்துள்ளன. ‘ஈழம்’ என்ற பெயர் இந்த நாட்டில் அதிகமாக தென்னை வளமும் பனை வளமும் நிறைந்து காணப்படுவதால் வந்த பெயராகும் என பல வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

LTTE அமைப்பின் நடவடிக்கை மௌனிக்கப்பட்டு ஒரு தசாப்தம் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக இலங்கையர்களாக வாழந்து வருகிறார்கள்.

இந்தவேளையில் ஒரு சர்வதேச சஞ்சிகை தனது ஆக்கம் ஒன்றில் LTTE இன் பெயரைக் குறிப்பிட்டிருப்பது அப்பத்திரிகையின் சுதந்திரம். ஆனால் எவ்வாறு உள்நாட்டுப் பத்திரிகை சுதந்திரத்தில் கைவைப்பது போல் சர்வதேச பத்திரிகை சுதந்திரத்திலும் அரசாங்கம் கைவைத்து வெற்றி கண்டுள்ளது என்றே சொல்ல முடியும்.

The Guardian சஞ்சிகை இந்தப் பதிவை நீக்கியதனூடாக தங்களுடைய ஊடக சுதந்திரத்தை தாங்களே விட்டுக்கொடுத்து உள்ளவர்கள் என்பதே உண்மை.

முடிந்த விடயங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதை விட, எதிர்கால விடயங்களை நோக்கி எல்லோரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என நான் கூறவில்லை.

இந்த நாட்டின் ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரங்களில் கூறி இருந்தார். அந்த அடிப்படையில் மீண்டும் மீண்டும் முடிந்து போன LTTE அமைப்பு தொடர்பான விடயங்கள் பற்றி ஊடகங்களில் வரும் விடயங்களுக்கு அரசாங்கம் அவதிப்பட்டு வழங்கும் எதிர்வினைகள், இனங்களுக்கு இடையிலான ஒரு சுமூகமான உறவினையே பாதிக்கும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்” என, கலாநிதி ஜனகன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.