பொலிஸாரின் தடையையும் மீறி எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி!

யாழ்.செம்மணி பகுதியில் பொலிஸாரின் தடையையும் மீறி வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிடவர்கள், முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, யாழில் இருந்து முல்லைத்தீவு செல்வதற்காக  யாழ் – மன்னார் வீதியூடாக  பயணித்த போது, சங்குப்பிட்டி பாலத்திற்கு சற்று தொலைவில் உள்ள கேரதீவு இராணுவ சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பி யாழ்.செம்மணி பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்ட போது, அங்கு வந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர், நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாக கூறி நிகழ்வினை தடை செய்தனர்.

இதன் போது, நீதிமன்ற உத்தரவை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார்.

அவர் புறப்பட்டு ஒரு சில நிமிடத்தில் வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், க.அருந்தவபாலன் உள்ளிட்ட குழுவினர் பொலிசாரின் தடையையும் மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.