இலங்கை போக்குவரத்து சபையை கட்டியெழுப்ப ஜனாதிபதியிடமிருந்து முன்மொழிவுகள்

இலங்கை போக்குவரத்து சபையை, இலாபமீட்டும் முன்னணி நிறுவனமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்.

திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதற்கு பதிலாக திறைசேரிக்கு நிதியை பெற்றுக்கொடுக்கும் அரச நிறுவனமாக இலங்கை போக்குவரத்து சபையை மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை போக்குவரத்து சபையின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கிழமை நாட்களில் முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் அதிக வாகன நெறிசல் காணப்படுகிறது. இந்த நெறிசலை குறைப்பதற்காக தமது சொந்த கார்களில் அலுவலகங்களுக்கு வருவோரை பொதுப் போக்குவரத்து சேவையுடன் இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதற்கு தீர்வாக தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் கார்களை நிறுத்தி அலுவலகங்களுக்கு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு தேவையான முறைமையொன்றை (Park and Drive) உடனடியாக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி முன்மொழிந்தார்.

இதற்கு முழுமையான வசதிகளைக் கொண்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்காக பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து பாடசாலை பேருந்து சேவையை மேம்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பாடசாலை பேருந்துகளை மஞ்சல் நிறத்துடன் வீதிகளில் முன்னுரிமை வழங்கப்படக்கூடிய வகையில் சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளையும் தனியார் பேருந்துகளையும் இரண்டு நிறங்களில் சேவையில் ஈடுபடுத்துவன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஊழியர்களை வலுவூட்டுதல், புதிய முறைமைகளை அறிமுகப்படுத்தல், வீண்விரயத்தை குறைத்தல் மற்றும் திருட்டுக்களை ஒழித்தல் போன்றவற்றுக்காக முறையான நடவடிக்கைகளை பின்பற்றவேண்டியது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நிறுவனத்தை முன்னேற்றுவதற்காக தொடர்ச்சியாக ஆய்வுகள் மற்றும் மீளாய்வுகள் இடம்பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுமார் 4500 பேர் கொண்ட திறமையான தொழிநுட்ப அதிகாரிகள் குழுவொன்று இலங்கை போக்குவரத்து சபையில் உள்ளனர்.

அவர்களிடமிருந்து முழுமையான பயனை பெற்று நிறுவனத்திற்கு வெளியே பராமரிப்புக்காக செயற்கட்டளைகளை பெற்று வருமானம் ஈட்ட முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பயன்படுத்தப்படாத பெருமளவான காணிகள் இலங்கை போக்குவரத்து சபையிடம் உள்ளன. அக்காணிகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலமும் வருமானம் ஈட்டமுடியும்.

கிராமிய பிரதேசங்களில் இருந்து விவசாய அறுவடைகளை கொண்டுசெல்வதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவக்கூடிய வாய்ப்புகள் இலங்கை போக்குவரத்து சபையிடம் உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பயிற்சிப் பாடசாலைகளை மேலும் மேம்படுத்தி ஊழியர் அறிவை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்திற்கு அமைய மொத்த நடடிவக்கைகளையும் முன்கொண்டு செல்வதற்கும் ஜனாதிபதியினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.