யாழ். பல்கலைக்குத் தகுதியான துணைவேந்தரைத் தேடுவதற்கு குழு நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ள, பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு அவர்களை விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிப்பதற்கென மூன்று சிரேஸ்ட பேராசிரியர்கள் கொண்ட தேடற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழக விசேட பேரவைக் கூட்டத்திலேயே மூன்று சிரேஸ்ட பேராசிரியர்கள் கொண்ட இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் அ.அற்புதராஜா தலைமையில், வரலாற்றுத் துறை சிரேஸ்ட பேராசிரியர் பி.புஸ்பரட்ணம் மற்றும் பௌதிகவியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் பு.ரவிராஜன் ஆகியோர் பேரவையினால் தேடற் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய சுற்றறிக்கை இம்மாதம் 4ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளரால் இம்மாதம் 15ஆம் திகதி பத்திரிகைகள் வாயிலாகக் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் ஜீன் 9ஆம் திகதி ஆகும்.

இந்நிலையில், சுற்றறிக்கையின்படி துணைவேந்தர் பதவிக்குப் பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, அவர்களைத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் பேரவையினால் தேடற்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவுக்கு அனுபவமும் ஆளுமையும் மிக்க சிரேஸ்ட பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதனால், அவர்களின் தேடலில் மிகப் பொருத்தமானவர்கள் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.