இராணுவ பதவி உயர்வுகள் தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா? – ஜஸ்மின் சூக்கா

இராணுவ அதிகாரிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளானது, இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் கூட இல்லை என்ற செய்தியையே அனுப்புவதாக உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்கியுள்ள இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடானது, அரசியலை அடிப்படையாக கொண்டது என்றும் இது இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் என்பது கூட இல்லை என்ற செய்தியை மீண்டும் அனுப்புகின்றது என்றும் ஜஸ்மின் சூக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், இது பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் இன்னுமொரு செயலாகவும், தண்டனையிலிருந்து துணிவாக பாதுகாப்பு வழங்கும் செயலாகவும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு துறைச் சீர்திருத்தத்திற்கான ஐ.நாவின் 30 இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானம், இலங்கையின் உறுதிப்பாடுகளுக்கு இணங்க உத்தியோகபூர்வமான பதவிகள் வழங்கப்பட முன்னர், அதிகாரிகள் வடிகட்டல் மற்றும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பியங்கா பெர்ணாண்டோ இலங்கையின் இராஜதந்திரியாக இருந்தவேளையில், பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறியதாக பிரித்தானிய நீதிமன்றத்தினால் குற்றங்காணப்பட்ட இவருக்கு, வழஙக்கப்பட்ட பதவி உயர்வானது இதில் மிகவும் முக்கியமானதாகும்.

2018 இல் உயர் ஆணையக கட்டிடத்திற்கு வெளியே தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கழுத்தை அறுக்கும் சைகையினைக் காட்டி அச்சுறுத்தல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
இவர் குற்றச் செயல்கள் புரிந்த போதும் இவர் இலங்கைக்கு திரும்பிச் சென்றதில் இருந்து இவருக்கு மீண்டும் மீண்டும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டதுடன் ஒரு மாவீரனாகவும் அழைக்கப்பட்டார் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகரித்த இராணுவ மயமாக்கல் மற்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு, சிவில் பதவிகள் வழங்கப்பட்டு வரும் பின்னணியில் இந்த பதவிவுயர்கள் இடம்பெற்றுள்ளன.

கொரோனாவினால் பாதுகாப்பு பற்றிய கரிசனைகள் இருந்த போதும் ஆயுதப்படையினரை உள்ளடக்கி இந்த வாரம் கொழும்பில் ஒரு போர் ஞாபகாரதத்த நிகழ்வு ஒன்றினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் இவ்வாறான ஞாபகார்த்த நிகழ்வு வடக்கு-கிழக்கில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினரால் வைரஸ் ஒரு சாட்டாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.