சட்டத்தரணி றோய் டிலக்சனின் வீட்டில் அத்துமீறித் தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான திரு.றோய் டிலக்சன் அவர்களின் ஆதனத்திற்குள் கடந்த (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகள் சிலர் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

இதன்போது, வீட்டின் உடமைகளுக்கும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளுக்கும் வாளால் வெட்டி ஆயுததாரிகள் அட்டகாசம் புரிந்தனர்.

குறித்த சட்டத்தரணியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த அடாவடித்தனமான செயற்பாட்டிற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் தனது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்வதாக சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

தொழில் ரீதியாக ஓர் சட்டத்தரணியாக தனது கடமைகளைச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மேற்கொண்டு வரும் திரு.றோய் டிலக்சன் அவர்களின் ஆதனத்தில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதலுக்கு எதிராக உரிய தரப்புக்கள் அனைத்தும் உரிய நடவடிக்கைகளை எடுத்து சட்டத்தரணிகளின் தொழில் செய்வதற்குரிய பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டுமென்று கோருகின்றோம்.

பாதிக்கப்பட்ட எமது உறுப்பினர் திரு.றோய் டிலக்சன் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் பக்க பலமாக இருக்கும் என்பதோடு அவருக்கு நீதி கிடைப்பதற்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்போம் என்ற உத்தரவாதத்தையும் வழங்கி நிற்கின்றது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.