புதிய முறையை தெளிவுபடுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை

பொதுத்தேர்தலுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கான தெளிவுபடுத்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள நிலைக்கு ஏற்றவாறான தேர்தல் நடைமுறைகள் தொடர்பில் முன்மொழிவுகளைச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்துக் கட்சிகளிடமும் கோரியிருக்கிறது.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் பரவலால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் பொதுத்தேர்தலில் அறிமுகப்படுத்தக்கூடிய புதிய முறைகளை முன்மொழியுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருக்கிறது.

எனினும் இவ்விடயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு அதன் முன்மொழிவுகள் மூலம் எம்மை மேலும் தெளிவுபெறச் செய்யவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சத்திற்கு மத்தியில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த கருத்தை தெரிவிக்குமாறு கோரியிருந்தபோதும் ஒருவர்கூட இன்னும் பதிலளிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.