நாட்டின் பல இடங்களில் 200 மி.மீ. அளவில் கடும் மழை வீழ்ச்சி

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் 200 மி.மீ. அளவில் கடும் மழை வீழ்ச்சி பதிவாகுமென அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமானபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதற்கும் சாத்தியம் காணப்படுகின்றது’ என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.