யாழில் வெடிப்புச் சம்பவம் – பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

யாழ். வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸார் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியிலையே இன்று (புதன்கிழமை) குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மண் அகழ்வுகள், மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் குறித்த பகுதியில் பொலிஸார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன், குறித்த சந்தி பகுதியில் நின்று வீதி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும்.

இந்நிலையில் இன்றைய தினமும் வழமையான வீதி சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பொலிஸ் வந்திறங்கியபோது, நிலத்தில் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததிலையே பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

அதேவேளை வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வயர்கள் உள்ளிட்ட பொருட்களும் காணப்படுகின்றன என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இராணுவத்தினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வெடிபொருள் மிதிவெடியாக இருக்கலாம் எனவும்  சட்டவிரோத மண் அகழ்வோர் பொலிஸாரை இலக்கு வைத்து அதனை அவ்விடத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனினும் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.