பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இரண்டு வாரங்களின் பின்னரே தீர்மானம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இருக்கும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “66 நாட்களுக்குப் பின்னர் இன்று முழுநாட்டிலும் மீண்டும் வழமையான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் எதிர்வரும் ஒரு வாரக் காலப்பகுதியில் சமூகத்தின் செயற்பாடு, போக்குவரத்துத் துறையிலான விடயங்கள் முதலான விடயங்கள் ஆராயப்படும்.

இதன் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது பல கட்டங்களின் கீழ் இடம்பெறும். முதல் கட்டத்தின் கீழ் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

நாட்டில், 43 இலட்சம் பாடசாலை மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் இவர்களது போக்குவரத்து வசதிகளுக்காக போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

தென்கொரியாவில் 4 மாதங்களுக்கு பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று இதனை நாம் செய்ய முடியாது. கொரோனா வைரஸ் தொற்று சர்வதேச ரீதியில் பெரும் பிரச்சினையாக இன்று அமைந்துள்ளது. இலங்கையிலும் அது உண்டு.

இந்த விடயங்களை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பாடசாலை மாணவர்களை பாதுகாத்து அதாவது பாடசாலைகளை மூடி கொரோனா தொற்றிற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தோம்.

இதே போன்றே இதனை முடிவிற்கு கொண்டு வந்து நாம் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்போம் என்பதே எமது நிலைப்பாடு. மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கபடும்“ எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.