ஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பு – வேலுகுமார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது மலையக மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், “மலையகத் தமிழர்களின் ஆளுமைமிக்க அரசியல் தலைவராக அமரர்.ஆறுமுகன் தொண்டமான் விளங்கினார்.மக்களுக்காக எந்தவொரு அரசாங்கத்துடனும் பேரம் பேசக்கூடிய வல்லமை அவரிடம் இருந்தது. ஆட்சியாளர்களும் அவரை ஒரு தேசிய இனத்தின் தலைவராக அங்கீகரித்திருந்தனர்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில்கூட சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. அமைச்சரவையிலும் ஒரு சமூகத்தின் குரலாக அவர் ஒலித்தார்.

எவ்வளவுதான் நெருக்கடிகள், சவால்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளித்து தான் சார்ந்த கட்சிக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார். வெற்றியை நோக்கியும் அழைத்துச்சென்றுள்ளார்.

அரசியல் களத்தில் எமக்கும் அவருக்குமிடையில் கொள்கை ரீதியில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனபோதிலும் ஒரு சமூகத்தின் தலைவர் அவர். ஒரு சமூகம் தலைவரை இன்று இழந்து தவிக்கிறது.

என்னதான் இருந்தாலும் தனது வாழ்வில் பெரும் பகுதியை மலையக மக்களுக்காக செலவிட்டவர். மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காக தனக்கே உரிய அரசியல் பாணியில் தீவிரமாக உழைத்தவர். எனவே, நாம் அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்தவேண்டும். இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இடம்பெறவேண்டும்.

அன்னாரது இழப்பால் துயருறும் அனைவரது துயரிலும் நானும் பங்கேற்கிறேன். ஆன்மா இளைப்பாறவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.