ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று முற்பகல் 10.15 முதல் 11.30 வரையில் நாடாளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த விரும்பும் சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துடன் இணைந்த திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களும் இன்று முற்பகல் 10.15 மணியளவில் நாடாளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்பட்ட பின்னர், கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான காரியாலயமான சௌமிய பவனில் வைக்கப்படவுள்ளது.

இதனையடுத்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் எதிர்வரும் 29ஆம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பிலிருந்து கம்பளை கொண்டுசெல்லப்பட்டு, புஸலாவை வழியாக ரம்பொடை வேவன்டன் இல்லத்தில் வைக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி பூதவுடல் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதி பிற்பகல் 1.30 அளவில் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு பிற்பகல் 4 மணியளவில் நோர்வூட் சௌமிய மூர்த்தி தொண்டமான் மைதானத்தில் இறுதி கிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.