கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது.

பூநகரி திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி பயணித்த ரிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தல் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி செய்திநகர் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சுப்ரமணியம் அன்னலட்சுமி என்ற வயோதிபப் பெண் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய உயிரிழந்த தாயாரின் மகள் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் குறித்த ரிப்பர் வாகனம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதியைக் கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.