இலங்கை இராணுவத்திற்கு எதிரான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

இலங்கை இராணுவத்திற்கு எதிரான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரையொன்று குறித்து அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரையில் இலங்கையின் பல படைவீரர்கள் குறிப்பாக சிரேஸ்ட அதிகாரிகள் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு, எந்த ஆயுதமோதலின் போதும் தனிநபரின் மனித உரிமையை பேணுவது மழைகாலத்தில் சேறு உருவாவதை தடுப்பதை போன்ற விடயம் என தெரிவித்துள்ளது.

யுத்தங்களின் கொந்தளிப்பான நிலை காரணமாக சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் ஒருவர் பின்பற்றவேண்டிய தெளிவான விடயங்களை முன்வைக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கை படையினர் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் என எந்த உத்தியோகபூர்வ ஆவணமும் நிருபிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எட்டு பொதுமக்களை கொலை செய்த படைவீரர் ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்கு வழங்கி விடுதலை செய்தமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்தும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ரத்னாயக்கவிற்கு தண்டனை வழங்குவதற்கு 13 வருடங்கள் எடுத்த போதிலும் இலங்கை நீதிமன்றம் இன்னும் நியாயமான சந்தேகங்களை கொண்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கமானது அதிகளவான விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளதாகவும், அவர்கள் மத்தியில் ரத்னாயக்க போன்று மோசமான நடவடிக்கைளில் ஈடுபட்டவர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதன் காரணமாக மன்னிப்பு வழங்குவது நியாயமற்றதோ அல்லது ஒழுக்கமற்றதோ இல்லை என குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இராணுவதளபதி யுத்தகுற்றச்சாட்டிற்கு உள்ளான ஜெனரல் என தெரிவிக்கப்பட்டிருப்பது மிகவும் நியாயமற்றது எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.