இராணுவப் பின்னணியையுடைய ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக ஏற்கமுடியாது- சிவமோகன்

இராணுவப் பின்னணியையுடைய ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக  ஒருபோதும் ஏற்க முடியாதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் இராணுவ பின்னணியையுடையவர் என்றும் செய்தி வெளியாகியுள்ளமைக்கு பதிலளிக்கும் வகையில்  அவர் இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் சிவமோகன் மேலும் கூறியுள்ளதாவது,   “தற்போது நாடு முழுவதும் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை விட அந்த அச்சம் மக்களை துன்புறுத்துகிறது. ஆனால் கொரோனா வைரஸ் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக பொறுத்துக் கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் ஆளுநருக்கு பதிலாக புதியவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. அதுவும் இராணுவ பின்னணியுடையவர் என்று அறிய முடிகிறது. அதை ஏற்க முடியாது.

இந்த அரசு, தமிழ் மக்களை ஒரு அச்ச சூழலுக்குள் வைத்திருக்கவே நினைக்கிறது. அப்படியான எண்ணத்தை உடனடியாக மாற்ற வேண்டும். தமிழரான சிவில் அதிகாரிகளையே வடக்கு மாகாண ஆளுநராக அரசு நியமிக்க வேண்டும்.

மேலும் தமிழர்களை ஓரங்கட்ட பழிவாங்கும் பேரினவாத சிந்தனையிலிருந்து அரசு விடுபட வேண்டும் அல்லது இந்த அரசின் அராஜகத் தன்மைகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என  குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.