ஐந்து மாதங்களில் 840 பேருக்கு டெங்கு- கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர்

கல்முனை சுகாதார திணைக்கள பிராந்தியத்தில் ஐந்து மாதங்களில் 840 பேருக்கு  டெங்கு நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அப்பிராந்தியத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் பல ஆண்டுகளாக டெங்கு நோய் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஒன்றாக காணப்படுகின்றது. தற்போதைய நிலையிலும் டெங்கு தாக்கம் நமது கல்முனைப் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.

கொவிட்-19 தொற்று காலத்தில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களும் தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் சமகாலத்தில் ஏனைய நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் சற்று தொய்வு நிலையில் ஏற்பட்டுள்ள நிலையில் மிகுந்த உத்வேகத்துடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

ஐரிஸ் நுளம்பின் மூலம் கடத்தப்படும் டெங்கு நோயின் தாக்கத்திற்கு, கடந்த வருடம் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் இலங்கையில் இனங்காணப்பட்டார்கள். கல்முனைப் பிராந்தியத்தில் கடந்த வருட முதல் ஐந்து மாத பகுதியில் 480 நோயாளிகள்இனங்காணப்பட்டார்கள்.

ஆனால் இந்த வருடம் ஐந்து மாதங்களுக்குள் நோயாளர்களின் எண்ணிக்கை 840 ஆக இரட்டிப்பு நிலையாக அதிகரித்துள்ளது. இதற்கு பல வேறுபட்ட காரணங்கள் எதுவாக அமைந்தாலும் இந்தப் பயங்கரமான நிலையை நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பமாக கருத வேண்டியுள்ளது.

உண்மையில் காலநிலை மாற்றம் பருவப் பெயர்ச்சி மழை  ஆகிய மாற்றநிலை டெங்கு நோய் பரவலுக்கு காரணமாக இருந்தாலும் நோய் தாக்கக்கூடிய நுளம்பின் பெருக்கமும் இரண்டு, மூன்று மடங்குக்கு மேலாக உள்ளது. இது ஒரு அபாய நிலையாகும். தற்போதைய இறுக்கமான சூழ்நிலையில் காலநிலை எவ்வாறு அமைந்தாலும் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும்.

டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களை அடையாளம் காண்பதும் அவைகளை அழித்து விடுவதுதான் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான மிகப் பிரதான பொறி முறையாக உள்ளது.

ஆகவே தற்காலிக கொள்கலன்களில் இருந்து வகைப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டை, பொலித்தீன் பைகள், டயர்கள் குப்பைகள் போன்றவற்றை சரியாக அகற்றிவிட வேண்டும். அத்துடன் கிணறுகள் நீர்த்தாங்கிகள் போன்றவற்றிற்கு வலைகளை பயன்படுத்தி மூடிவிடவேண்டும. நீர்த்தேங்க கூடிய குட்டைகள், மரப் பொந்துகள் என்பவற்றை அடைத்துவிட வேண்டும். ஆகவே மக்களின் பங்களிப்புதான் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கும் பரவாமல் தடுப்பதற்கும் மிக முக்கியமான விடயமாக காணப்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.