பொன்னாலைக் கிராம மக்களுக்கும் தமிழ் இளையோர் கூட்டமைப்பு உதவி!

வலிகாமம் மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பொன்னாலைக் கிராமத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சுயதொழில் மேற்கொள்ளும் 20 குடும்பங்களுக்கு தமிழ் இளையோர் கூட்டமைப்பால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த உலர் உணவுப் பொதிகளுக்கான அனுசரணையை ஊரெழு கிராமத்தைச் சேர்ந்த தற்போது கனடாவில் வசித்துவரும் அமரர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் அவரது ஞாபகார்த்தமாக வழங்கியுள்ளனர்.

வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீஷனின் ஒழுங்கமைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்றிட்டத்தில் தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரியர் லயன் சி.ஹரிகரன் மற்றும் கிராம மக்கள் இணைந்து பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

பொன்னாலைக் கிராமத்தில் குறித்த பிரதேச மக்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள். இவர்களுக்கு கொரோனா ஏற்பட்டு சுயதொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட காலத்தில் எந்த அமைப்போ அல்லது அரசியல் வாதிகளோ இதுவரை உலருணவுப் பொதிகள் எவையையும் வழங்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர்.

தம்மிடம் இருக்கின்ற பொருள்களை விற்று தமது பிள்ளைகளின் வயிற்றுப் பசியைப் போக்கியுள்ளதாகவும்; அவர்கள் கண்ணீர் மல்கத் தமது அவல நிலையைத் தெரிவித்தனர்.

ஒரு குடும்பத் தலைவர் தன்னிடம் இருந்த – தமது ஒரேயொரு துவிச்சக்கரவண்டியை அதன் பெறுமதியில் இருந்து மிகவும் குறைந்த விலைக்கு 3 ஆயிரம் ரூபாவுக்கு விற்று வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொள்வனவு செய்துள்ளார் என்று தமது சோகக் கதையை வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.