கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1643 ஆக அதிகரிப்பு

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 10 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1643 ஆக அதிகரித்துள்ளது.

இவர்கள் இந்தோனேசியா, பெரலஸ் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் 821 பேர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 10 பேர் நேற்று குணமடைந்திருந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம் நேற்று கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களில் 6 கடற்படை சிப்பாய்களும் உள்ளடங்குவதாக கடற்படை ஊடக பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள கடற்படை சிப்பாய்களின் மொத்த எண்ணிக்கை 405 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் நேற்று காலை ஒருவர் உயிரிழந்தார். அண்மையில் குவைத்திலிருந்து நாடு திரும்பிய 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்