பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையில் மாற்றம்

பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலமும் அறிவித்துள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவத்துள்ளது.

நாட்டின் அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்து ஏனைய பொருட்கள் அனைத்தினதும் இறக்குமதியில் கட்டுபாடுகள் விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வெதுப்பகங்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “வெதுப்பக உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் கலப்பும் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெதுப்பக உணவுகளுக்கு பாம் எண்ணெய் மற்றும் மாஜரின் முக்கியமானதாகும். அதுபோல் முட்டையும் அத்தியாவசியமான பொருளாகும்.

இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதற்கு அமைய மாஜரின் மற்றும் பாம் எண்ணெயை இறக்குமதி செய்ய அதிகளவில் பணம் செலவிட வேண்டியுள்ளது.

ஒரு கிலோ பாம் எண்ணெய்க்கான இறக்குமதி வரி 300 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வெதுப்பக உரிமையாளர்கள் அதிக பணம் செலவழித்து இவற்றை இறக்குமதி செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மாஜரினுக்கான வரி 215 ரூபாயாக இருந்தது. இது ஒரேடியாக 650 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறு அதிக வரிகளை செலுத்தி இறக்குமதி செய்ய முடியாது. அவ்வாறு இறக்குமதி செய்தால் அதிக விலையில் வெதுப்பக உணவுகளை விற்க வேண்டிவரும்.

எனவே இறக்குமதி பொருட்களுக்கு வரி சலுகை வழங்க வேண்டும் என ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளோம்.

அதற்கமைய எமக்கு வரி சலுகைகள் வழங்க வேண்டும். இல்லையேல் பாண் உள்ளிட்ட சகல வெதுப்பக உணவுகளுக்கும் விலை அதிகரிக்க வேண்டி வரும் என்றார்” எனமேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.