நீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் – டக்ளஸ் தேவானந்தா

நீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றை கலைத்தமை மற்றும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “அடிப்படையில் ஒன்றை ஒழித்து வைத்துக்கொண்டு வெளிப்படையில் இன்னொன்றை பேசுவதை போலத்தான் இந்த வழக்கும் தாக்கல் செய்யப்படிருக்கிறது.

தேர்தலுக்கு முகம் கொடுக்க சிலர் தற்போது தயாரில்லை. இந்த ஆழ்மன அச்சத்தில் இருப்பவர்கள் நீதியின் தீர்ப்பு வேறுவிதமாக அமையும் என்று நம்பியிருந்திருக்கிறார்கள். ஆனாலும் நீதிமன்றம் நியாயத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது

சரி பிழைகளுக்கு அப்பால் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு விரைவாக புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதன் ஊடாக சீரழிந்து போயிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியமைக்க வேண்டும்.

சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நாடு சீரான முறையில் நகர தொடங்கும் அதேவேளை ஏனைய தேசிய பிரச்சினைகளுக்கும் யதார்த்தமான வழிமுறையில் தீர்வு காணப்பட வேண்டும். ஸ்திரமான அரசு இருந்தால்தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

ஆகவே முரண்பாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றுபட்டு நீதிக்கு தலை வணங்க வேண்டும். நீதிமன்றம் வழங்கிய நியாயத்தீர்ப்பை போலவே தேர்தலில் மக்கள் தீர்ப்பும் நியாயத்தீர்ப்பாக அமையும் என்பது உறுதி” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.