அமெரிக்க இராஜதந்திரி விவகாரம் – ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கண்டனம்

பி.சி.ஆர். சோதனைக்கு உட்பட மறுத்ததன் மூலம் அமெரிக்க அதிகாரி, தூதரக உறவுகள் தொடர்பான இராஜதந்திர பிரகடனத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளார் என ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி நாட்டிற்குள் வந்தபோது பி.சி.ஆர். சோதனைக்கு உட்பட மறுத்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர விடுபாட்டுரிமை ஒரு நாடொன்றின் சட்டங்களையும் விதிமுறைகைளையும் மீறுவதற்கு அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் மற்றும் சிவில் நியாயாதிக்கத்திற்கு மாத்திரமே விடுபாட்டுரிமை வழங்கப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ள அவர், எனினும் வியன்னா பிரகடனம் விடுபாட்டுரிமைக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

அவை இராஜதந்திரிகள் தவறாக நடந்துகொள்வதற்கான அனுமதியை வழங்கவில்லை எனவும் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான மீறல்கள் இடம்பெற்றால் குறிப்பிட்ட நாடு அந்த இராஜதந்திரியை தனது நாட்டின் ஏற்றுக்கொள்ளப்படாத இராஜதந்திர பிரதிநிதி என அறிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி டுபாயிலிருந்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதன்போது விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை செய்ய அவர் மறுத்தமை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து, அவர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.