நாடாளுமன்றத் தேர்தல் எப்போது? திங்கள் கூடுகின்றது ஆணைக்குழு



பொதுத்தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிக்கவும், தேர்தலுக்கான அடுத்தகட்ட ஆயத்தங்கள் குறித்து ஆராயவும் நாளைமறுதினம் திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் ஆணைக்குழு கூடுகின்றது.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும், எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் அடுத்ததாக தேர்தல் திகதி குறித்த அறிவிப்பை சகல தரப்பும் எதிர்பார்த்துள்ளது. இந்தநிலையில் கடந்த புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு கூடி பேச்சுகளில் ஈடுபட்ட போதிலும்கூட தேர்தல் திகதி குறித்து எந்தவித தீர்மானமும் எடுக்க முடியாது போயுள்ளது.

இந்தநிலையில், நாளைமறுதினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடுகின்றது. தேர்தல்கள் திணைக்களத்தில்  இடம்பெறும் இந்தக் கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது திணைக்கள அதிகாரிகள் மட்டத்திலான பேச்சும் நடத்தப்படவுள்ளது.

இதன்போது சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகள், முன்மொழிவுகள் குறித்தும் அவற்றை கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளன.

குறிப்பாக தேர்தல் பிரசாரங்களை கட்சிகள் மற்றும் குழுக்கள் முன்னெடுக்கும்போது மக்களை அவர்கள் தொடர்புகொள்ளும்போதும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படுவது சாத்தியமா, ஊடகங்கள் சகல வேட்பாளர்களுக்கும் முன்னுரிமை வழங்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அவை குறித்தும் கலந்துரையாடவுள்ளன.

மேலும் விருப்பு இலக்கம் வழங்கப்படுவது, தபால்மூல வாக்களிப்பு திகதி தீர்மைப்பு குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதேவேளை, அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடலை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகள் கோவையை சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும் கையளிக்கவும் தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.