இடம்பெயர்ந்த மக்களுக்கும் கொடுப்பனவு கிடைக்க வழி செய்யுங்கள்- பிரதமரிடம் ரிஷாட் கோரிக்கை!

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு இதுவரைக்கும் வழங்கப்படாமல் இருக்கின்ற 5000 ரூபாய் கொடுப்பனவினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் நிர்வாக முடக்கல் ஏற்பட்டதினால், மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதன்போது அரசாங்கம், நாட்டு மக்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை முதற்கட்டமாக வழங்கியது. இந்த கொடுப்பனவை வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம், கல்பிட்டி, முந்தல், வண்ணாத்தவில்லு உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவில் வாழும் மக்களுக்கு வழங்குவதில் இழுபறி நிலை காணப்பட்டது.

அதனையடுத்து, ‘வடக்கு இடம்பெயர்ந்த மக்களின் அமைப்பு’ எடுத்துக்கொண்ட முயற்சியினால் வடக்கில் இந்தக் கொடுப்பனவை பெறாத நிலையில், புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு இதனை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும் இது தொடர்பில் இன்னும் எதுவும் இடம்பெறாத நிலையில் காணப்படுகின்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த கொடுப்பனவை தற்போது அவர்கள் வாழும் பகுதிகளில் வழங்குவதற்கு தேவையான உத்தரவினை உரிய அதிகாரிகளுக்கு அரசாங்கம் விடுக்க வேண்டும்.

மேலும் இம்மக்களது இந்தப் பிரச்சினை குறித்து அரசாங்க அதிபர்களுடன் பேசியுள்ளதாகவும் இதற்கான நிதி இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்ற பதிலையே அவர்களால் கொடுக்க முடிந்துள்ளதாகவும் இந்த நிதியினை வழங்காமல் தடுக்கும் செயற்பாடுகள் ஏதும் இடம்பெறுமெனில் அதனை கவனத்திற்கொண்டு இடம்பெயர்ந்த நிலையில் வாழும் இம்மக்களுக்கு அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட இந்த உதவித் தொகையினை பெற்றுக்கொடுக்க, நாட்டின் பிரதமர் என்ற வகையில் தேவையான பணிப்புரையினை அரச அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்” என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.