இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 21 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 21 நோயாளிகளில், குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 16 பேரும் கட்டார் மற்றும் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய தலா இரண்டு பேரும் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 50 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து நேற்று வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் இருந்து 22 பேரும் காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் இருந்து 13 பேரும் மினுவாங்கொடை வைத்திசாலையில் இருந்து 7 பேரும் தேசிய தொற்று நோயியில் நிறுவகத்தில் இருந்து 5 பேரும் இரணவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 பேரும் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் இவ்வாறு குணமடைந்து வெளியேறியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 883 பேர் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 70 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.