நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்புக்கு கோட்டா செயலணியின் உறுப்பினர்களா? – ஜனநாயகத்துக்கு முரண் என்று சஜித் அணி எதிர்ப்பு…

“பொதுத்தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த விசேட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களை நியமிக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. இது ஜனநாயக தன்மைக்கு முரணான செயற்பாடாகும். அத்துடன் சாதாரண வாக்களிப்பு செயற்பாடுகளுக்கும் இது சிக்கலைத் தோற்றுவிக்கக்கூடும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சட்டதரணி சிறால் லக்திலக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-

“அரசு மக்கள் மீது எந்தவித அக்கறையும் இன்றி செயற்படுகின்றது. நாட்டில் தற்போது பசளைத் தட்டுப்பாடு, பொருட்களின் விலை அதிகரிப்பு , ஒழுங்கான வருமானம் இன்மை , தொழில் வாய்ப்பு இல்லை , ஏற்கனவே இருந்த தொழிலும் சிலருக்கு இல்லாமல்போயுள்ள நிலையில் அரசு மக்களுக்கான சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சிந்திக்காது இராணுவ ஆட்சியை முன்னெடுப்பது தொடர்பிலே அக்கறை செலுத்தி வருகின்றது.

இந்தநிலையில் எமது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் தற்போது பொலிஸார் சேகரித்து வருகின்றனர். அந்தத் தகவல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்படுவதை விடுத்து, அதற்கு மாறாக இதனூடாகப் பழிவாங்கல்களை முன்னெடுக்க முயற்சிக்கக்கூடாது.

இதேவேளை, பொதுத்தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களை நியமிக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. இது ஜனநாயக தன்மைக்கு முரணான செயற்பாடாகும். இது சாதாரண வாக்களிப்பு செயற்பாடுகளுக்குச் சிக்கலைத் தோற்றுவிக்க கூடும்.

இந்தநிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசால் வெற்றிகொள்ளமுடியும் என்று ஆளும் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இது ஒருபோதும் சாத்தியமாகாது. அரசின் நிலையும் எதிர்க்கட்சியின் நிலையும் சமாந்திரமாகவே இருக்கின்றது. இந்தநிலையில் அரசுக்கு  மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வது என்பது முடிந்த காரியமல்ல.

அரசு மக்கள் மத்தியில் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்து வந்தாலும் , ஆளும் தரப்பில் சிலர் தேர்தலைப் புறக்கணிக்க முயற்சிக்கின்றனர். இதேவேனை சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதால் வாக்களிப்பு வீதம் குறைவடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் இதனூடாக மிகப் பயனடையக் கூடியவர்கள் யார் என்பது தொடர்பில் மக்கள் நன்கு சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும். தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை நிலைநாட்டுவதன் எண்ணத்திலே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.