தொண்டமானின் இளைய மருமகனுக்கு எதிராக பாரிய மோசடிக் குற்றச்சாட்டு! – சி.ஐ.டியிலும் முறைப்பாடு…
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இளைய மகளின் கணவர் (தர்ஷன்) மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று ஊழல் எதிர்ப்பு தேசிய கூட்டணியால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி.) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தர்ஷன் (இந்தியப் பிரஜை) Yapka Developers (PVT) Limited நிறுவனத்திடமிருந்து ரூ .10 மில்லியன் கமிஷனைப் பெற்றார் என்று குற்றப் புலனாய்வுத்துறையில் (சி.ஐ.டி.) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என ஊழல் எதிர்ப்பு தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஊழல் எதிர்ப்பு தேசியக் கூட்டணி பதில் பொலிஸ்மா அதிபருக்குக் கடித மூலம் முறையிட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டில்,
“ஆறுமுகம் தொன்டமானின் அமைச்சில் தர்ஷன் உயர் பதவியில் இருந்தார். அவர்தான் அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் மற்றும் பல்வேறு திட்டங்கள் போன்றவற்றுக்குப் பொறுப்பாகச் செயற்பட்டதுடன் அனைத்து கட்டுமான மற்றும் திட்டங்களுக்கும் அவர் 10 வீதம் கமிஷனைப் பெற்றார் என்பது நாங்கள் விசாரித்தபோது தெரியவந்தது.
மீள்குடியேற்ற அமைச்சால் செயற்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டம் மீள்குடியேற்ற அமைச்சால் Yapka Developers (PVT) Limited நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பதற்கு தர்ஷன் கமிஷன் பெற்றார் என்று தற்போது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
ஆயிரம் வீடுகளுக்கு தர்ஷனின் கமிஷன் 10 கோடி ரூபா. பணத்தில் ஒரு பகுதி முற்கூட்டியே செலுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சகத்துடன் இந்தத் திட்டத்தை ஒருங்கிணைத்த விஜயலட்சுமி கேதீஸ்வரம் இதற்கு உடன்படாததால் அவரை தர்ஷனும் தொன்டமானின் செயலாளர் முகம்மதுவும் அச்சுறுத்தியுள்ளனர்” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சி.ஐ.டியிடம் தர்ஷன் தொடர்பாக இரண்டு முறைாபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் அரச வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாகவும் மற்றும் Yapka Developers (PVT) Limited நிறுவனத்திடம் கமிஷன் பெற்ற மோசடி தொடர்பாகவும் தர்ஷன் அடுத்த சில நாட்களில் கைதுசெய்யப்படவுள்ளார் என்று சி.ஐ.டி. தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
இந்தப் பெரிய அளவிலான மோசடி தொடர்பாக எதிர்காலத்தில் ஜனாதிபதி விசேட புலனாய்வு ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளதாக ஊழல் தடுப்பு தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை