சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்த அரசு முயற்சி – சி.வி.கே

மிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான முயற்சியாகவே கிழக்கு மாகாணத்தில் மரபுரிமைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் செயலணியை பார்ப்பதாக வடமாகாணசபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மன்னாரில் தோண்டப்பட்ட மனிதப்புதைகுழி நூற்றாண்டு பழமையானது என கூறி அதனை தொடர்ந்து ஆய்வு செய்யாமல் மூடுவதற்கு முண்டியடித்தவர்களே கிழக்கு மாகாண மரபுரிமை செயலணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே இந்த செயலணியின் நோக்கம் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதாகவே இருக்கும்.

மாகாணசபை இருந்த காலத்தில் தொல்லியல் திணைக்களத்தின் பொறுப்புள்ள உயர் பதவி தமிழர் ஒருவருக்கும் வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் வடக்கின் எல்லையில் தமிழ் மக்களின் நிலம் பறிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை என்று சிவஞானம் தெரிவித்தார்.

தமிழர்களின் நிலம், மொழி அச்சுறுத்தப்படுகின்றது. மறுபக்கம் தாம் பௌத்த சிங்கள அரசாங்கத்தை உருவாக்கியிருப்பதாக ஞானசார தேரர் போன்றவர்கள் கூறுகின்றனர்.

எனவே தேர்தல் முடிவின் பின்னர் தற்போதுள்ளதை விடவும் நிலமைகள் மேலும் மோசமாகலாம்.

எனவே தமிழ் தரப்பு இந்த விடயத்தில் தனித்தனிப்பயணங்களை விடுத்து தேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயற்படுவது கட்டாயமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.