யாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் – விகாராதிபதி

இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் நாக விகாரை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் வீதியோரமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் இன்று (புதன்கிழமை) காலை சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நாக விகாரையில் ஒரு சிறிய தாக்குதல் சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

அதனை குழப்புவதற்காக சிலரால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதுதான் எனது கருத்து.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

இந்த விடயம் குறித்து தென்பகுதியில் உள்ள பௌத்த மக்களோ அல்லது வேறு இன மக்களோ குழப்பமடைய வேண்டாம்.தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்.

இந்த விடயத்தினை பெரிதாக்கி எமது இன ஒற்றுமையை குலைக்காது. அனைவரும் ஒற்றுமையாக செயற்படுமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.