ஐ.தே.க. ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுத் தருவார்கள் என்பது பகல் கனவு – வே.இராதாகிருஸ்ணன்

ஐக்கிய தேசியக் கட்சி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுத் தருவார்கள் என்பது பகல் கனவு என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைப்பாளர்களுடனான சந்திப்பு நுவரெலியாவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது அமளிதுமளி ஏற்பட்டு தொழிலாளர் பிரதிநிதிகள் சிறிகொத்தையில் இருந்து வெளியேறிய சம்பவம் யாவரும் அறிந்த விடயம். இவர்களுக்கே இப்படி என்றால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்.

பொதுவாக ஐ.தே.க. தொழிலாளர்சார் கட்சியல்ல. முதலாளிமார்சார் கட்சி என்பது யாவருக்கும் தெரியும். இவர்கள் முடிந்தளவு முதலாளிமார்களின் நலன் குறித்தே செயற்படுவர். மலையக பெருந்தோட்டங்களை எடுத்துக்கொண்டால். 95 வீதமான தோட்டங்கள் தனியார் முதலாளிமார்களுக்கே சொந்தமானது.

இந்நிலையில் இவர்கள் எப்படி பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க முன் வருவார்கள். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்தையின்போது அரசாங்கத்தின் அமைச்சராக இருந்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் நவீன் திசாநாயக்க இவரே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக இருந்தவர்.

இவர் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் போட்டியிடுகின்றார். இவருக்கு பெருந்தோட்ட மக்கள் நல்ல பாடம் ஒன்றினை கற்பிப்பர் என நினைக்கின்றேன்.

தற்போது பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தல் முடிந்தவுடன் பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குதல் குறித்து பேச்சுவார்தை நடத்த வேண்டும். அதற்கு ஒரு திடமான அரசாங்கம் வேண்டும். அதுவும் தொழிலாளர்கள் சார்பில் அக்கரை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

அதற்கு பொருத்தமானது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்று நினைக்கின்றேன்” என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.