வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 201 கடற்படை வீரர்கள் வீடு திரும்பினர்

வவுனியா – பம்பைமடு மற்றும் பெரியகாடு இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்களில் சிலர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய குறித்த முகாம்களில் 20 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்ட 201 கடற்படை வீரர்களே இன்று (வியாழக்கிழமை) காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பம்பைமடு இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 131 பேரும் பெரியகாடு இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 70 பேருமாக மொத்தம் 201 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை உத்தியோகத்தர்கள் பலருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்பபடுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

அதற்கமைய வெலிசறை இராணுவ முகாமைச் சேர்ந்த 276 கடற்படை வீரர்கள் கடந்த மே மாதம் 22 ஆம் திகதி இரவு பம்பைமடு இராணுவ முகாம் மற்றும் பெரியகாடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

குறித்த இரண்டு இராணுவ முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டிருந்த கடற்படை வீரர்களில் இம் மாதம் 6ஆம் திகதி நான்கு கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பி .சி .ஆர் பரிசோதனைகளில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் நால்வரும் ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அத்தோடு, தற்போது பம்பைமடு இராணுவ முகாமில் 40 பேரும் பெரியகாடு இராணுவ முகாமில் 31 கடற்படை வீரர்களும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.