22, 260 அபாயகரமான வெடிபொருட்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சியில் அகற்றல்

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 22 ஆயிரத்து 260 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2020 ஜீன் மாதம் 08ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழுள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதிகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் வெடிபொருட்களை அகற்றியுள்ளது.

இதன்படி பதினொரு இலட்சத்து ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து நான்கு சதுரமீற்றர் பரப்பளவில் (1,101,954) இருந்து இருபத்து இரண்டாயிரத்து இருநூற்று அறுபது (22, 260) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது. தொடர்ந்து இந்த நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை மற்றும் ஆனையிறவுப் பகுதிகளில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.