முன்னாள் போராளிகள் மீது அக்கறை கொண்டுள்ளதாக சுமந்திரன் கூறுவது முற்றிலும் பொய்- சுரேஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது அக்கறை கொண்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவருடைய கட்சிக்காரரே மறுதலிக்கும் அளவிற்கு கூச்சம் இல்லாமல் சுமந்திரன் பொய்பேசி வருவதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படமுடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவ்ர தெரிவிக்கையில், “கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆயுதப் போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சாரப்பட கருத்துக்கள் ஏ.எம்.சுமந்திரனால் கூறப்பட்டது.

அவருடை கருத்திற்கு அவர் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்து பல அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். அத்துடன், ஏ.எம்.சுமந்திரன் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமைப் பீடத்தில் அழுத்தங்களைக் கொடுத்திருந்தார்கள்.

தமிழரசுக் கட்சி மட்டுமல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் கடும் கண்டனங்களை தெரிவித்து, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த விவகாரங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வந்த ஏ.எம்.சுமந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். அந்த சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக அழுத்தங்களை தான் கொடுத்ததாக தெரிவித்திருந்தார். தான் மட்டும்தான் முன்னாள் போராளிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் போராளிகளை கட்சியில் இணைப்பது என்பது பொதுவான கருத்தாக இருந்தும், எம்.ஏ.சுமந்திரன் தான் மட்டும்தான் அந்த கோரிக்கையை முன்வைத்ததாக சொல்வது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் கே.வி.தவராசா தனது கருத்தில் உறுதிபட தெரிவித்துள்ளார். அதிலும் இவ்விடயத்துடன் தொடர்பற்றவர் போல சுமந்திரன் இருந்திருந்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

போராளிகளை இணைப்பது, இணைக்காமல் விடுவது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும்கூட வவுனியாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தங்களுடன் ஜனநாயக போராளிகள் கட்சியினர் பேசியதாகவும், அவர்களை இணைப்பது குறித்து தமிழரசுக் கட்சியிலும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனும் பேசி அதற்கான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் போராளிகள் தொடர்பாகவும், அவர்களைக் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வது தொடர்பாகவும், கட்சியின் தலைவரும், கூட்டமைப்பின் பேச்சாளரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

தேர்தலுக்காக நாங்கள் எல்லோரும் போராளிகளுக்காக செயற்படுகின்றோம் என்ற தொனியில் கருத்துக்களை வெளியிடுவதையும் எங்களால் காணக்கூடியதாக உள்ளது.

ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னவர்கள், ஆயுதம் தூக்கிப் போராடிய போராளிகளை எவ்வாறு கட்சியில் ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஒரு முரண்பாடான கருத்தாகும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.