கருணாவின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை – சுமந்திரன்

கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாகத் தெரியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

அம்பாறை – அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை விமர்ச்சித்து வருவதுடன், குறிப்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனை தேர்தல் வியாபாரி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை. கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு கருணா என்பவர் யார் என்று விஷேடமாக நன்றாகத் தெரியும். கண்டவர்களின் கூற்றுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை” எனக் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.