பத்தி எழுத்தாளர் ரஜீவ ஜயவீர துப்பாக்கியால் சுட்டுக்கொலை திஸ்ஸ அத்தநாயக்க சந்தேகம்; விசாரணைக்கும் வலியுறுத்து

“பத்தி எழுத்தாளரும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியுமான ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரின் மரணத்தில் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. அவர் தற்கொலை செய்தமைக்கான எவ்வித காட்சிகளும் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்திலுள்ள சி.சி.டி.வி. கமராக்களில் பதிவாகவில்லை. எனவே, இது மனிதப்  படுகொலையாகும். இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் அண்மையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியாகச் சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கபட்டார். அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்று இருவேறு வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் மறைந்துள்ள இரகசியம் என்ன?

உயிரிழந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர பல ஊழல்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வந்த நபராவார். ஸ்ரீலங்கன் விமான உள்ளிட்ட விமான சேவைகளில் இடம்பெற்றுள்ள ஊழல்கள் தொடர்பில் அவர் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது கொலை யாராலும் எதிர்பார்க்க முடியாதளவுக்கு இடம்பெற்றுள்ளது.

இவரது மரணத்தை தற்கொலை என்று உறுதிப்படுத்துவதற்கு சில ஊடகங்களும் பொலிஸாரும் முயற்சிக்கின்றமையைக் காணக்கூடியதாகவுள்ளது. அவர் தற்கொலைக்கான கடிதமொன்றையும் எழுதி வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது? சுதந்திர சதுக்கத்தில் இவ்வாறானதொரு மரணம் இடம்பெற முடியுமா என்பது முதலாவது பிரச்சினையாகும்.

ரஜீவ ஜயவீர அங்கு சென்று தற்கொலை செய்தமைக்கான எவ்வித காட்சிகளும் அங்குள்ள சி.சி.டி.வி. கமராக்களில் பதிவாகவில்லை. அனைத்து சி.சி.டி.வி. பதிவுகளும் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொழிநுட்பக் கோளாறு காரணமாக அவை அழிவடைந்துள்ளதாகக் கூறுகின்றனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தும் காரணியாகும்.

ரஜீவ ஜயவீர குறித்த பகுதிக்கு வருகை தந்த முறை, தற்கொலை செய்து கொண்ட முறை என எந்த அடையாளமும் இல்லை.

அவரது கொலை அல்லது மரணம் இடம்பெற்றுள்ள விதம் பற்றி அவதானிக்க வேண்டும். அவர் வாயில் சுட்டு உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஒருவர் வாயில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்ற செய்தியை இப்போதே முதன்முறையாகக் கேட்கின்றேன்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் தலையில் சுட்டே  உயிரிழப்பார்கள். வரலாற்றில் நூற்றுக்கு நூறு வீதம் இவ்வாறே இடம்பெற்றுள்ளது. ஆனால், இவர் வாயில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறுகின்றனர். அத்தோடு அவர் சுட்டுக் கொண்ட துப்பாக்கி ரவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவ்வாறெனில் இதற்கான காரணம் என்ன? வாயில் சுடப்பட்டுள்ளது என்று கூறும்போது, “வாயைத் திறக்க வேண்டாம். அதிகமாகப் பேச வேண்டாம். ஊழல்கள் பற்றிப் பேச வேண்டாம். எழுத வேண்டாம். இதுவே நாம் தரும் தண்டனை” என்பதைப் பலவந்தமாக வலியுறுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் செய்யப்பட வேண்டும். இது மனிதப்  படுகொலையாகும்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் யாருடைய பாதுகாப்பை உறுதி செய்வது? இதில் அச்சுறுத்தல் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதன் மூலம் ஏதேனுமொரு கருத்தைக் கூற முற்படுகின்றனர். இது மிகவும் அபாயமானது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.