அத்துமீறிய மீன்பிடி மூலம் கொரோனா அபாயம்- மாநகர பதில் முதல்வர் ஆளுநருக்கு சுட்டிக்காட்டு

அத்துமீறிய இந்திய மீனவர்களின் மீன்பிடி மூலம் மீண்டும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உண்டு. மேலும் எம்மவர்களின் வாழ்வாதாரமும் சுரண்டப்படுகின்றது என மாநகர பதில் முதல்வர் து.ஈசன், ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) அவர் அனுப்பிய அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்திய மீனவர்கள் வடக்கின் கடல் எல்லைப் பரப்பிற்குள் அதிலும் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பின்வரும் விடயங்கள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

குறிப்பாக மீன்பிடியை மட்டும் தமது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்துவரும் குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவதுடன், தமது வருமானங்களை இழந்து மிகுந்த சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.

மேலும் இந்தியாவில் தற்பொழுது கொவிட் 19 தாக்கம் அதிகரித்து வருவதனை நாம் அவதானிக்க முடிகின்றது. இதனால் கொவிட் – 19 நிலைமைகள் குறைந்து சுமூகமான நிலையை நோக்கி நகரும் எமது மக்களின் வாழ்வில், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மூலம் மீண்டும் கொவிட்-19 தாக்கம் அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் தோன்றுகின்றது.

எனவே மேற்படி விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதன் ஊடாக கொரோனா பரவல் தாக்கத்தினையும் வடக்கில் கட்டுப்படுத்துவதற்கு தங்களின் மூலம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.