ரணில் – சஜித் ‘டீல்’ மோதலால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பு வசமாகக்கூடும் – மஹிந்த அணி கணிப்பு

“அரசுடனான ‘டீல்’ தொடர்பில் ரணில் தரப்பும் சஜித் தரப்பும் தங்களுக்குள் மோதிக்கொள்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சாதகமாக அமையும். இதனால் பொதுத்தேர்தலில் பின்னர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றவும் கூடும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய மாகாணங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும்தான் அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியோ எந்தவொரு மாவட்டத்திலும் அதிக ஆசனங்களைக் கைப்பற்றமாட்டாது. ஆனால், மாவட்டங்களில் ஒரு ஆசனங்களையும் கைப்பற்றாத கட்சிகளின் பட்டியலில் பல இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் பெயர்கள் இடம்பிடிக்கும்.

ரணில் தரப்பும் சஜித் தரப்பும் இணைந்து ‘நல்லாட்சி’ என்ற பெயரில் மத்திய வங்கியைக் கொள்ளையடித்து நாட்டை நாசமாக்கியதை நாட்டு மக்கள் மறக்கவேமாட்டார்கள். அதனால்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜ முன்னணியின் அசைக்க முடியாத தனியாட்சியை நிறுவ நாட்டு மக்கள் தயாராகிவிட்டார்கள்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.